சென்னை: வட சென்னை அனல் மின் நிலையத்தின் அமைக்கப்பட்டுள்ள  3-ஆம் நிலையில்  வரும் அக்டோபர் மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என தமிழ்நாடு மின்துறை  துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்கனவே 2 நிலைகள்  மின்உற்பத்தி செய்து வரும் நிலையில், 3வது நிலை அமைக்கும் பணி 8327 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, இறுதிக்கட்ட பணிகளை விரைவாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  கோட்டையில்,.  அண்மையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தியதன் பேரில் வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் 3ஆம் நிலைய திட்டத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் ஆய்வு செய்ததாக கூறினார். மேலும் 3வது நிலை கலன்களின் கட்டுமானப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.  எந்தெந்த பிரிவுகளில் தொய்வு ஏற்பட்டு திட்டப் பணிகள் தாமதமாகிறது என்பது கண்டறியப் பட்டு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றவர்,  பணிகள் முடிவடைந்து வரும் அக்டோபர் மாதம் மின் உற்பத்தி தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

குறைந்த அளவிலான நிலக்கரியை கொண்டு அதிகபட்ச மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் இந்த அனல்மின் நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.