புதுடெல்லி: தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியே தனிப்பெரும் கட்சியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், பாரதீய ஜனதா அல்லாத அரசியல் கூட்டணியே மத்தியில் ஆட்சியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி.

தேர்தல் முடிவில் பாரதீய ஜனதாவுக்கு 100 முதல் 120 இடங்கள் வரை பற்றாக்குறை ஏற்படும் என்றும், அந்த இழப்பை அக்கட்சியால் ஈடுசெய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “வரும் மே மாதம் 23ம் தேதிக்குப் பிறகு, பாரதீய ஜனதா அல்லாத ஒரு அரசியல் கூட்டணி மத்திய ஆட்சியை அமைப்பது உறுதி. ஆனால், அதுகுறித்த விரிவான கணக்கீடுகளை இப்போது பேசத் தேவையில்லை.

இந்தமுறை தொங்கு நாடாளுமன்றமெல்லாம் அமையாது. பாரதீய ஜனதா அல்லாத அரசியல் கூட்டணிக்கு நிச்சயம் பெரும்பான்மை கிடைக்கும். ஒரே கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று சொல்வது நிச்சயம் கடினம்தான். அதேசமயம், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில், பாரதீய ஜனதாவுக்கு இடங்கள் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. மேலும், குடியுரிமை மசோதாவால், வடகிழக்கிலும் அக்கட்சிக்கான எதிர்ப்பு நிலவுகிறது” என்றுள்ளார்.