ஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஜாமீனில் வ்ர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெக்ரீக்-இ-இன்சாப் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேசத் துரோகம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஊழல் வழக்கில் கடந்த மே மாதம் இம்ரான்கான் கைது செய்யப்பட்டார். மே மாதம் 8 மற்றும் 9-ந் தேதிகளில் பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர்.

அப்போது  ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக இம்ரான்கான் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  மேலும் தேர்தல் ஆணையத்தை அவமதித்த வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் பவாத் சவுத்ரிக்கு எதிராக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி) ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையம் இம்ரான்கான் மற்றும் பவாத் சவுத்ரி தனிப்பட்ட முறையில் சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக பிடிஐயின் பல தலைவர்கள் மீது அவமதிப்பு வழக்குகள் தொடங்கப்பட்டன.

இவர்களுக்கு எதிராகப் பல நோட்டீஸ்கள் வழங்கப்பட்ட போதிலும், கட்சித் தலைவர்கள் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முன் ஆஜராகவில்லை. பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் இரண்டு பேரும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகாததால், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.