அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் மின் நிறுவன ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது மின்வாரிய ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா அரசின் மின் நிறுவனமான CPDCL நிறுவனம், மின் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து உத்தரவிட்டு உள்ளது. இது அந்நிறுவன ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சி.பி.டி.சி.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜே.பத்மா ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் மின் நிறுவனங் களில் பணியாற்றி வரும், மின்வாரிய ஊழியர்கள், பணி நேரத்தில் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தள்ளார்.

மேலும், பலர், வேலை நேரத்தின் செல்போன்களை பார்த்து, பணி நேரத்தை வீணடிப்பதாகவும், இதனால் அன்றாட வேலை நேரத்தின் போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து இருப்பதாகவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி அமலுக்கு வரும் என்றும், சி.பி.டி.சி.எல். ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வரும் போதே தங்கள் செல்போனை ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பணி நேரத்தில் போன் பேச அனுமதி கிடையாது என்றும், மதிய உணவு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையின் போது செல்போனை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஊழியராவது இந்த விதிகளை பின்பற்ற தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே சமயம் அதிகாரிகளுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.