டெல்லி: தேசிய தேர்வுகளான  நீட், ஜேஇஇ, க்யூட்  உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒன்றாக இணைக்கும் முன்மொழிவு எதுவும் மத்தியஅரசிடம் இல்லை என்று மத்தியக்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்  தெரிவித்துள்ளார்.

நீட், ஜேஇஇ, கியூட்  போன்ற தேசிய நுழைவுத்தேர்வுகளுக்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களிடம் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து உரையாடினார். அப்போது மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உடனிருந்தார். மாணவர்களுடன் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒன்றாக இணைக்கும் முன்மொழிவு எதுவும் வரவில்லை என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் உயர்கல்விக்காக நடத்தப்படும் தேசிய தேர்வுகளான நீட், JEE, CUET ஆகிய 3 நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.  இந்தியாவின் முதன்மையான தேர்வுகளான இந்த 3 தேர்வுகளையும் சுமார் 43 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஒவ்வொரு மாணவரும் இதில், குறைந்தபட்சம் 2 தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த தேர்வுகள் அனைத்தும் இணைத்து ஒரே தேர்வாக நடத்த மத்தியஅரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேர்வுகள் இணைக்கப்படாத என்று மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.