சென்னை,

ணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா தற்போது கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார். அப்போது, தான் மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும், தமிழகத்தில்தான் தங்குவேன் என்றும் கூறி உள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் ராணுவத்துக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்க வலியுறுத்தி 16 ஆண்டுகளாக போராடியவர் இரோம் சர்மமிளா. மணிப்பூரில் 2000ஆம் ஆண்டு முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்ட அவர், கடந்த ஆண்டு போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சி சார்பாக முதல்வர் வேட்பாளராக அவர் களமிறங்கினார். ஆனால், அவர் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்ப வில்லை போலும்.  அவர் மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் சவுபால் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.

அதையடுத்து, அரசியலில் இருந்து ஒதுங்கி மற்ற மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தற்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இரோம் ஷர்மிளா,  தற்போது தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் அவர் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த இரோம் ஷர்மிளா,  கொடைக்கானலில்  அமைதியான அழகான சூழல் நிலவுவதால் இங்கேயே நிரந்தரமாக  வசிக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறினார்.

மேலும், இன்றைய நிலையில் அரசியல் பற்றி குறிப்பாக எந்த திட்டமும் என்னிடம் இல்லை. நீதிக்கான போராட்டத்தை வாழ்நாள் முழுவதும் நடத்த உறுதி பூண்டுள்ளேன். அரசியல் நுழைவில் தமக்கு ஏற்பட்ட தோல்வி ஏமாற்றம் அளித்துள்ளது. தமக்கு மக்கள் வாய்ப்பு அளிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதனால் அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் துளியும் இல்லை என்று கூறினார்.

மேலும், மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் ஒரு நாள் நிச்சயம் ரத்தாகும் என்று தாம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், இன்னும்  இரண்டு மாதங்களில் தான் காதலித்த டெஸ்மேண்ட் கவுடின்கோவை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறி உள்ளார்.