சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு காரணமாக, மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என  தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் 2வது அலை வீசி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா,  டெல்லி,  குஜராத் உள்பட பல மாநிலங்களில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்,  தமிழகத்திலும்  தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தேர்தல் முடிந்ததும், லாக்டவுன் அறிவிக்கப்படும் என மக்களிடையே வதந்திகள் பரவி வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்,  தேசிய அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகமாக கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து வருகிறோம்.

கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது. சூழலுக்கேற்ப முடிவு எடுக்கப்படும். மேலும், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது அரசின் வேலை அல்ல. கொரோனா பரவலைத் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். வரக்கூடிய நாட்களில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.

முழு ஊரடங்கு வரப்போகிறது. இரவு நேர ஊரடங்கு வரப்போகிறது என்று வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.