டில்லி

க்சிஜன் பற்றாக்குறையால் 2ஆம் அலை கொரோனா காலகட்டத்தில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இரண்டாம் அலை கொரோனா கால கட்டத்தில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.   இதையொட்டி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது.    மத்திய அரசு பல இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தொடங்கி மாநில அரசுகளுக்கும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார். அமைச்சர் அந்த பதிலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்பது மாநில அரசுகள் அளித்த அறிக்கை மூலம் தெரிய வருவதாகக் குறிப்பிட்டார்.

மத்திய கொரோனா மரணங்களை எவ்வாறு வகைப்படுத்தி தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருந்ததாகவும், அதன்படி வழங்கப்பட்ட அறிக்கைகளைப் பார்த்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட இறக்கவில்லை என தெரிய வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா இரண்டாம் அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமானோர் உயிர் இழந்ததாக ஒவ்வொரு மாநிலமும் செய்திகள் வெளியிட்டிருந்தது.   அப்படி இருக்க நாடாளுமன்றத்தில் அமைச்சர் இவ்வாறு அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.