கொல்கத்தா: தேசப்பற்று என்ற பாடத்தை பாரதீய ஜனதாவிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இந்த வகையில், மீண்டும் ஒரு புதுவிதமான தாக்குதலை பாரதீய ஜனதா கட்சி மீது ஆவேசமாய் தொடங்கியுள்ளார் மம்தா பானர்ஜி.

அவர் கூறியுள்ளதாவது, “நாம் அனைவரும் இந்தியர்கள். நாம் வங்காளத்தில் பிறந்துள்ளோம். எனது தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். எனவே, தேசப்பற்று என்ற பாடத்தை, பாரதீய ஜனதாக் கட்சியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை.

புல்வாமாவில் எதற்காக நமது வீரர்கள் தேவையின்றி ரத்தம் சிந்த வேண்டும்? நமது உளவுத்துறை தோல்வியடைந்து விட்டதா? வீரர்கள் சிந்திய ரத்தத்தில் சிலர் அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கின்றனர். துரதிஷ்டவசமாக, நமது விமானப்படை, பாகிஸ்தானில் நடத்திய தாக்குதல் விபரங்கள் நமக்குத் தெரியவில்லை.

அந்த விபரங்களைக் கேட்டால் நம்மை தேசவிரோதிகள் என்கின்றனர். நாம் நமது வீரர்களின் பக்கமும், நாட்டின் பக்கமும் நிற்கிறோம். ஆனால், பாரதீய ஜனதாவிற்கு எதிராக நிற்கிறோம்” என்று கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

– மதுரை மாயாண்டி