சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு புதிதாக வாங்கப்படும் மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் தனியார் பேருந்து சேவை தொடர்பாக சென்னை மாநகராட்சி டெண்டர் வெளியிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆனால், அமைச்சர், தனியார் சேவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அரசு பேருந்து சேவையில் எந்தவொரு மாற்றமும் கிடையாது என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில்  போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் .சிவசங்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆலோசனையில், ஜிசிசி முறையில் பேருந்து இயக்கத்தை ரத்து செய்தல், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது அளிக்கப்பட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுதல், அரசாணை 321முதல் 328 வரை ரத்து செய்தல்,போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை, உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் முன்வைத்தனர்.

இதை கேட்டுக்கொண்ட அமைச்சர் பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறியவர்,  உலக வங்கியின் கருத்துருபடி, ஜிசிசி முறையில் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து, ஒப்பந்த அடிப்படையில் மாநகரப் போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் செயல்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழு பரிந்துரைக்கு மட்டுமே ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது என்றார்.

மேலும்,  தொழிற் சங்கத்தினரின் கோரிக்கை யை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச்சென்று , உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்றவர், தமிழ்நாடு அரசு வாங்கும்,  500 புதிய மின்சாரப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குர் அ.அன்பு ஆபிரகாம், தொமுச பேரவை பொதுச் செயலாளர் எம்.சண்முகம் எம்.பி., பொருளாளர் நடராஜன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் உடனிருந்தனர்.