மதுரை: மத்திய அரசின் துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து தமிழக மாணாக்கர்களுக்கு போதியளவு விழிப்புணர்வு இருப்பதில்லை என்று தெரிவித்துள்ளார் மதுரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி உதவி கமாண்டன்ட் சனிஷ்.

மதுரையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போதுதான் அவர் இந்தக் கருத்தைப் பதிவுசெய்தார். ராணுவம் உள்ளிட்ட பல துறைகளை அவர் உதாரணமாக கூறினார்.

முன்னேறாத வடமாநிலங்களைச் சேர்ந்த மாணக்கர்களுக்கும், அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து இருக்கும் விழிப்புணர்வு அளவிற்கு தமிழக மாணாக்கர்களுக்கு இல்லை என்று கூற்று பல்லாண்டுகளாகவே உண்டு என்பது கவனிக்கத்தக்கது.

“ராணுவம், பாரா மிலிட்டரி, மத்திய தொழில் பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் 50,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்கள் உள்ளன.

அத்தேர்வுகளில், ஆன்லைனில் ஆங்கிலம், அடிப்படை விஞ்ஞானம், கணிதத்தில் கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. மத்திய வேலைவாய்ப்பு இணையதளத்தில் ‍சென்று விபரம் அறியலாம். ஆனால், இதுகுறித்து தமிழக மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு இல்லை” என்றார் சனீஷ்.