திருவனந்தபுரம்,

கேரளாவில் அரசு ஊழியர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால், வரும் 1ந்தேதி சம்பளம் கிடையாது என்று அதிரடியாக அறிவித்து உள்ளது.

இது அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு  நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை  கட்டாயம் பதிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்த் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கேரள அரசு ஊழியர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் அவர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்கப்படமாட்டாது என்று கேரள அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கேரள அரசின் தலைமை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கேரள அரசின் அத்தனை அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது,

அதில், கேரள அரசின்  அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது ஆதார் கார்டு, ரே‌ஷன் கார்டு, பான்கார்டு போன்றவற்றின் நகல்களை தாங்கள் பணிபுரியும் அரசு அலுவலகங்களில் வருகிற 31-ந்தேதிக்குள் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைத்தவர்களுக்கு மட்டுமே அடுத்த மாதம்  1-ந்தேதி சம்பளம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் ரேஷன் கார்டு சலுகைகளை ரத்து செய்தும் அறிவித்து உள்ளது.

மாதம் ரூ.1500 மற்றும் அதற்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்கள்,  4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் போன்றோருக்கு  ரே‌ஷன் சலுகைகளை ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

டில்லியில் மத்திய அரசின் ஆதார் திட்டத்துக்கு கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கேரளாவின் கம்யூனிஸ்டு அரசு ஆதார் எண் இருந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் என்று அதிரடியாக அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.