பாட்னா

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக நிகழ்வில் கலந்துக் கொண்டதால் அம்மாநிலத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறவை முறித்துக்கொண்டது.  ஆயினும் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்குத் திரும்புவதாகச் சமீபத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

நேற்று பாரதிய ஜன சங்கத் தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளையொட்டி பாட்னாவில் பாஜக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பங்கேற்று, உபாத்யாயா சிலைக்கு மரியாதை செலுத்தியபோது, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணிக்குத் திரும்புவதாகக் கூறப்படுவது குறித்து நிதிஷ்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்,

 ‘இது என்ன அர்த்தமற்ற பேச்சு? அப்படி எந்த திட்டமும் இல்லை’  எனது ஒரே நோக்கம் இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலுப்படுத்துவதாகும். எனது ஒரே நோக்கம். நான் அதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். பல்வேறு குழுக்கள் இந்தியா கூட்டணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து முடிவு செய்வதற்கு அமைக்கப்பட்டு நான் எனது ஆலோசனைகளைத் தெரிவித்துவருகிறேன்’

என்று பதிலளித்தார்.

நிதிஷ்குமார் கூறியது குறித்து பா.ஜ.க. தலைவரும், நிதிஷ்குமார் அரசில் முன்பு துணை முதல்வராக இருந்த சுஷில்குமார் மோடி,

தற்போது நிதிஷ்குமார் அரசியல் சுமையாகிவிட்டார். ஒரு ஓட்டு கூட அவரால் எதிர்க்கட்சி கூட்டணிக்குக் கிடைக்காது. நாங்கள் அவரை மீண்டும் ஏன் எங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும்?  நிதிஷ்குமாருக்கான அனைத்து கதவுகளும் அடைபட்டுவிட்டன. அவர் தரையில் விழுந்து உருண்டு புரண்டு கெஞ்சிக்கேட்டாலும் நாங்கள் சேர்த்துக்கொள்ள மாட்டோம்’

என்று கூறியுள்ளார்.