பாட்னா,
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று மாலை திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இது இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், நிதிஷ்குமார்மீது கொலை கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளது, மேலும் அவர் ஆர்.எஸ்.எஸ்.சுடன் சேர்ந்து விட்டார் என்றும் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லுபிரசாத் யாதவ் பகிர் தகவல்கள் கூறி உள்ளார்.
நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த லாலு, “நிதிஷ் குமார் பாஜகவின் கைகளுக்குள் நின்று விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் மோடியுடன் கூட்டு வைத்துள்ளது எல்லோருக்கும் தெரியும்.
நிதிஷ் ராஜினாமா செய்த சில மணித்துளிகளில் மோடி வாழ்த்து தெரிவிக்கிறார். இப்போது நிதிஷும், தேஜஸ்வியும் ஒதுங்கி நிற்கட்டும். மீதம் உள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புதிய அரசை அமைக்கட்டும்” என்றார்.
மேலும், “ நிதிஷ் குமார் தேஜஸ்வியை ராஜினாமா செய்யச் சொன்னார். தேஜஸ்வி தவறு செய்யாதபோது, எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விளக்கத்தை நிதிஷ் குமாருக்கு அளித்திருக்கிறோம்.
நிதிஷ் குமார் கொலை மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறார். கொலை என்பது ஊழலைவிட மோசமான செயல். இந்தக் குற்றச்சாட்டுகளை தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்த கிரிமினல் குற்றச்சாட்டிலிருந்து விடுபட முடியாது என்பது ராஜினாமாவுக்கு முக்கியக் காரணம்.
எல்லாவற்றுக்கும் மேல் நிதிஷ் ஆர்.எஸ்.எஸ் . உடன் கூட்டு சேர்ந்துவிட்டார்” என்று லாலு கூறியுள்ளார்