சென்னை: செயற்கை நுண்ணறிவு(artificial intelligence) மற்றும் தரவு அறிவியல்(data science) என்ற பிரிவுகளில் இளநிலை பி.டெக் படிப்புகளை வழங்குவதற்கான அனுமதியை அளிக்க ஏஐசிடிஇ முடிவுசெய்துள்ளது.

இத்தகைய தொழில்நுட்பங்களில் நிலவும் மனிதவள தட்டுப்பாட்டை ஈடுசெய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஏஐசிடிஇ அமைப்பின் தலைவர் அனில் தத்தாத்ரேயா சஹாஸ்ரபுடே தெரிவித்தார்.

இந்திய கல்வி மேம்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது, “அடுத்தப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய தொழில்நுட்பங்களில் புதிய பட்டப் படிப்புகளை உருவாக்குவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட கமிட்டியானது, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் ஆகிய இரண்டு துறைகளை மட்டுமே அங்கீகரித்துள்ளது.

மேலும், இண்டர்நெட் ஆஃப் திங்ஸ், ப்ளாக்செயின் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டன.

ஆனால், இப்போதைக்கு அத்தகைய துறைகளில் முழுஅளவிலான பட்டப்படிப்புகளை வழங்கத் தேவையில்லை என்றும், சிறப்பு பாடங்களாக மட்டும் வழங்கத் தொடங்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டது” என்று தெரிவித்தார் அவர்.