சென்னை

சென்னை நகரில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வாகனங்களுக்கான புதிய வேக வரம்பை அறிவித்துள்ளது. வரும் 4 ஆம் தேதி முதல் இந்த புதிய வேக வரம்பு அமலுக்கு வருகிறது. ஏற்கனவே கடந்த 2003-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பு தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மறுமதிப்பீடு செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் இலகுரக வாகனங்களுக்கு அதிகபட்ச வேகமாக 60 கிலோமீட்டர் வேகம் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்ச வேகமாக 50 கிலோமீட்டர் வேகம் நியமிக்கப்பட்டுள்ளது. தவிர மூன்று சக்கர வாகனங்களுக்கு அதிகபட்ச வேகமாக 40 கிலோமீட்டர் வேகம் நியமிக்கப்பட்டுள்ளது.

நகரின் குடியிருப்பு பகுதிகளுக்குள் அனைத்து வாகனங்களும் அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் வேகத்திற்குள்தான் செல்ல வேண்டும் என்றும் அதை மீறிச் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.