லண்டன்: பிரிட்டனின் குடியேற்ற விதிகளை திருத்தும் செயல்பாட்டை துவக்கியுள்ளார் அந்நாட்டின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன்.

பிரிட்டனின் புதிய பிரதமராக அண்மையில் தேர்வுசெய்யப்பட்டார் போரிஸ். இவர், முந்தையப் பிரதமர் தெரஸா மே வகுத்த குடியேற்ற விதிகளில் மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகான காலகட்டங்களில், அந்நாட்டில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இந்தப் புதிய திருத்தங்கள் அமையும் என்று கூறப்படுகிறது.

வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டிருந்து. ஆனால் புதிய அரசு அதை நிராகரித்துவிட்டது. தெரஸாவின் திட்டமானது புதிதாக குடியேறுபவர்களின் விஷயத்தில் பாதியளவு சுதந்திரப் போக்கை கடைபிடித்தது.

ஆனால் போரிஸ் ஜான்சனின் விதிகள், புதிய குடியேறிகள் விஷயத்தில் அதிக சுதந்திரத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது. குடியேறிகளின் பணித் திறன்கள் மற்றும் நாட்டின் பொருளாதார தேவைகளின் அடிப்படையில் புதிய குடியேற்ற விதிகள் அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.