காத்மாண்டு,
நேபாளத்தில் இந்தியாவின் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில்  பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8 ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக  புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றப்பட்டு வருகிறது.
ஆனால், நேபாளத்தில் இந்தியாவின் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரிசர்வ் வங்கியை போன்றது நேபாளத்தின் ராஸ்டிரா  வங்கி. இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுகளை உபயோகப்படுத்த  நேபாளம் ராஸ்டிரா வங்கி  தடை விதித்துள்ளது.
இந்தியாவின் புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் அரசு வாயிலாக வராததால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்நிய பரிமாற்ற மேலாண்மை சட்டத்தின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி முறையான நோட்டீஸ் கொடுத்த பின்னரே, இந்திய நோட்டுக்கள் நேபாளத்தில் உபயோகப்படுத்துவது குறித்து  முடிவு எடுக்கப்படும் என்று நேபாளம் ராஸ்டிரா வங்கி தெரிவித்துள்ளது.
rastrabank-nepal
இந்திய அரசு அளிக்கும் அரசு ரீதியிலான ஒப்புதல் நோட்டீஸ்தான், நேபாளத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் இந்திய ரூபாய் நோட்டுக்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு தரப்பில் இருந்துதான் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதுவரைக்கும் இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுக்கள் நேபாளத்தில் செல்லாதவையாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நேபாள ராஷ்டிர வங்கியின் கிழக்கு மண்டல தலைவர் ராமு பவ்டெல் கூறுகையில்,
”இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி, ஒரு நேபாள பிரஜை 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ரூ. 25,000 வரை வைத்துக் கொள்ளலாம்.
இந்த ரூபாய் நோட்டுக்களின் விதியே கேள்விக் குறியாக இருக்கும்போது, எப்படி புதிய ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலையில், தற்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்திய, நேபாள நோட்டுகளுக்கு இடையே எல்லைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், புதிய இந்திய ரூபாய் நோட்டுக்கள் அண்டை நாடுகளிலும் உபயோகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.