திருவனந்தபுரம் :

முகமது உசேன் (47) கடந்த 20 ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்து வந்தார், மே மாதம் இந்தியா திரும்பத் திட்டமிட்டிருந்தார். ஏப்ரல் மாதத்தில், கொரோனா வைரஸ் காரணமாக அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி வெளிநாட்டில் பணிபுரிவோர் நடத்தி வரும் ஒரு சமூக நல அமைப்பிலிருந்து அவரது குடும்பத்திற்கு அழைப்பு வந்தது. இதற்குப் பிறகு எந்த செய்தியும் இல்லை – ஒரு வாரம் கழித்து, கோழிக்கோட்டில் (வடக்கு கேரளா) உள்ள அவரது குடும்பத்தினருக்கு அவரது அடக்கம் செய்யப்பட்ட புகைப்படங்கள் கிடைத்தன.

கேரளாவைச் சேர்ந்த சுமார் 18 லட்சம் பேர்  வளைகுடா நாடுகளில் பணிபுரிவதாக 2018 ம் ஆண்டு கணக்கெடுப்பு கூறுகிறது. அங்கிருந்து  வரும் தகவல்களின்படி, வளைகுடாவில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த 296 பேர் கொரோனா வைரஸ் நோய் காரணமாக மரணமடைந்துள்ளனர், ஆனால் அங்கு பணிபுரியும்  வெளிநாட்டவர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த  எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

ஹுசைனின் குடும்ப உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் புகைப்படங்களாவது  கிடைத்தன, ஆனால் மற்றவர்கள் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல. நிலைமை மேம்பட்டவுடன் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் சில குடும்பங்கள், தங்களின் அன்பானவர்களின் உடல்களை சவக்கிடங்கில் வைத்திருக்கின்றனர். “எனது தந்தையின் உடல் பஹ்ரைனில் ஒரு சவக்கிடங்கில் உள்ளது. நிலைமை மேம்பட்டவுடன் உடலை மீண்டும் கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று இறந்த மற்றொருவரின் மகள் கூறினார்.

மத்திய அமைச்சர் வி முரளீதரன் கூறுகையில், மே மாதம்  அரசாங்கம் விமான சேவைகளைத் தொடங்கியபோது, ​​ஒரு நாளைக்கு குறைந்தது 36 விமானங்களை கேரளாவுக்கு இயக்க மத்திய அரசு  தயாராக இருந்தது. கேரள அரசு தான், தங்களால் ஒரே நேரத்தில் அவ்வளவு பயணிகளை கையாள முடியாது என்று கூறி விமானங்களின் எண்ணிக்கையை பன்னிரெண்டாக குறைத்தது  என்று கூறினார்.

மாநில அரசு இதனை மறுத்துள்ளது, “நாங்கள் எந்த விமானங்களையும் தடுக்கவில்லை. சூப்பர் ஸ்ப்ரெடர்களையும் சமூக பரவலையும் கண்காணிக்க சில முடிவுகளை எடுத்தோம். மாநிலத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் வெளிநாட்டிலிருந்தோ அல்லது பிற மாநிலங்களிலிருந்தோ வருபவர்களாலேயே ஏற்படுகிறது” என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

வடக்கு கேரளாவில் 60 சதவீத வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர், பல பகுதிகளில் மீண்டும் மாநிலத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள்  சூப்பர் ஸ்ப்ரெடர்களாக முத்திரை குத்தப்பட்டனர், இது உண்மையிலேயே தங்களுக்கு  வேதனை அளிப்பதாகவும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.   “முதல்வர் பினராயி விஜயன் கூட சூப்பர் ஸ்ப்ரெடர்களை கண்காணிக்க மாநிலம் திரும்பி வருபவர்களுக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்றார். அவரது வார்த்தைகள் தவறான செய்தியை அனுப்பியுள்ளன” என்று இந்திய வெளிநாட்டு காங்கிரஸின் கன்வீனர் மன்சூர் பலூர் கூறினார்.

மாநில அரசாங்கம் தனது தரவுகளில் தான் அதிக அக்கறை கொண்டுள்ளதே தவிர வெளிநாடுகளில்  சிக்கித் தவிக்கும் மக்களின் நலன் அல்ல, மாநில அரசின் நடவடிக்கையே பல மரணங்களுக்கு வழிவகுத்தது என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி விமர்சித்தது. “வெளிநாடுகளில் அவர்கள் கொல்லப்படுவதற்கு பதில் அரசாங்கம் அவர்களை இங்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்கும் வழியைக்கான வேண்டும்” என்று முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

இதற்கிடையில், தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் வெளிநாட்டிலிருந்து இவர்களை அழைத்துவந்திருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று வெளிநாட்டவர்கள் கூறுகின்றனர். “பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கூட மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தங்கள் குடிமக்களை அழைத்துச் சென்றன, நிலைமை மோசமடையும் வரை அந்த நாடு காத்திருக்கவில்லை. இந்தியா அந்த பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டது. ஆரம்ப மாதங்களில் நாம்  அவர்களை வெளியேற்றியிருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இப்போது மாநில அரசே வெளிநாட்டவர்கள் சூப்பர் ஸ்ப்ரேடர்களாக இருக்க முடியும் என்று கூறுகிறது, ” என்று எழுத்தாளரும் புலம்பெயர்ந்தோர் உரிமை ஆர்வலருமான ரெஜி குட்டப்பன் கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் கேரளரல்லாத குடியிருப்போர் சங்கம் (நோர்கா) தாயகம் திரும்பி வர விரும்புவோருக்காக ஒரு வலைத்தளத்தைத் திறந்தது, நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் (சரியாக 4,56,431) இரண்டு வாரங்களில் தங்களை பதிவு செய்தபோது அவர்களின் விரக்தி மிகவும் தெரிந்தது. 90,000 பேர் மாநிலத்திற்கு திரும்பியுள்ளதாக மாநில அரசு கூறியது, ஆனால் நோர்கா வலைத்தளத்தில் ஜூன் 22 வரை நாடு திரும்பியோர் எண்ணிக்கை  55,905 ஆக உள்ளது.

கேரள மாநிலம் திரும்பி வருபவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை  கட்டாயமாக்கி கேரள அரசு பிடிவாதமாக இருந்தது, ஆனால் தூதரகங்களில் சோதனைகள் நடத்த சாத்தியமில்லை என்று மத்திய அரசு இதை நிராகரித்தது பின்னர் ஒரு பெரிய சீற்றம் ஏற்பட்டது,   ஒரு கட்டத்தில், விமானங்களில் ஏறுவதற்கு முன்பு மக்களைச் சோதிக்க தேவையான கிட்களை அனுப்பத் தயாராக இருப்பதாக மாநில அரசு கூறியது. வெளிநாட்டில் வசிக்கும் நபர்களின் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்வேளையில், வெளிநாட்டினரை அழைத்துவருவதில் மத்திய மாநில அரசுகள் இடையே உள்ள இந்த மோதல் போக்கு வெளிநாட்டில் வாழ்பவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துவதோடு மேலும் பல உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மாநில  அரசு அலட்சியத்தோடு செயல்படவில்லை என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை   மறுத்ததோடு, வெளிநாட்டினரை அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரட்டுவதற்கு எதிர்க்கட்சிகள்  ஒன்றிணைந்து செயல்படுவதாக கூறினார்.

2018 ம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய  மொத்தப் பணத்தில் 19 சதவீதம் கேரளாவில் உள்ளவர்கள் அனுப்பியதே ஆகும். 2019 ம் ஆண்டு இது ரூ .1 லட்சம் கோடியாக உயர்ந்து நாட்டிலேயே மிக அதிகமாக வருவாய் ஈட்டிய மாநிலமாக கேரளா இருந்தது என்று  மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

பேரிடர் காலங்களில் கேரள மாநிலத்திலிருந்து பிற இடங்களுக்கு புலம்பெயர்ந்தோர்  அந்த மாநில அரசுக்கு எப்போதும் உதவி வந்தனர். ஆனால் கோவிட் -19 தொற்றுநோய்களின் போது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் அவர்கள்  கைவிடப்பட்டதாக இப்போது உணர்கின்றனர்.