சென்னை: சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது ‘நீட்’உயிர்கொல்லி தேர்வு. நீட் ஓர் உயிர்கொல்லி தேர்வு என்பதனை நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அறிக்கை உரக்கச் சொல்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“நீட் தேர்வில் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இந்தத் தேர்வின் தீவிளைவுகளைப் பட்டியலிடுகிறது. அதன்படி, கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ்வழியில் பயின்றோர் மருத்துவராகும் கனவை இத்தேர்வு சிதைக்கிறது. நீட் தேர்வுக்குப் பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14.44 விழுக்காட்டிலிருந்து 1.7 விழுக்காடாக சரிந்துள்ளது. இது சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான தேர்வு என்பதற்கு இந்தப் புள்ளிவிவரமே போதுமானது.

நீட் தேர்வுக்குப் பிறகு எம்பிபிஎஸ் படிப்பில் சிபிஎஸ்இ, ஆங்கில வழியில் படித்த மாணவர்கள்தாம் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

நீட் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் 90 விழுக்காடு தனியார் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்றவர்கள். நீட் தேர்வின் பின்னால் இருப்பது வணிகநோக்கம்தான் என்பது நான் ஆரம்பம் முதலே சொல்லிவரும் ஒன்று. இந்தப் புள்ளிவிவரங்கள் அதை உறுதிசெய்கின்றன.

நாட்டிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருப்பது தமிழ்நாடு. இந்தத் தேர்வு நீடிக்குமானால் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புச் சிதையும்.

நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமிழ் வழியில் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. உலகம் முழுக்க தாய்மொழிக் கல்வி ஊக்குவிக்கப்பட்டவரும் சூழலில், நீட் தேர்வு தாய்மொழி கல்விக்கு எதிரான மனோநிலையையே வளர்க்கிறது.

நகர்ப்புறத்தில் பிறந்த பண வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பினை உருவாக்கும் இந்த அறமற்ற உயிர்கொல்லித் தேர்வினை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும்.

உண்மைகளை வெளிக்கொணர்ந்து சட்டப் போராட்டத்திற்கான வழிவைகைகளையும் ஆராய்ந்த சொன்ன ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவினருக்கு மக்கள் நீதி மய்யம் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இக்குழுவின் பரிந்துரைகளின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.