டில்லி

நாடெங்கும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று கொரோனா கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்தியா முழுவதும் நீட்  தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான நீட் தேர்வு கொரொனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.  மீண்டும் பல முறை தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் மேலும் மேலும் தள்ளி வைக்கப்பட்டது.

இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி  நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அன்று கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம்

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வசதியாகத் தேர்வு நடக்க உள்ள நகரங்கள் எண்ணிக்கை 155லிருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேலும் தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் 3862 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் படி தேர்வு மையங்களில் அனைத்து தேர்வர்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட உள்ளது.  தேர்வு மையங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் நேரங்கள் சரியாக கடைப்பிடிப்பது, தொடர்பு இல்லாத பதிவுகள், சரியான சுகாதார அமைப்பு,  சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் ஆகியவை பின்பற்றப்பட உள்ளன.