புதுடெல்லி: பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராத் கோலியை நீக்க வேண்டுமென கெளதம் கம்பீர் தெரிவித்திருந்த நிலையில், கேப்டனாக கோலி நீடிக்க வேண்டுமென ஆதரவு தெரிவித்துள்ளார் வீரேந்திர சேவாக்.

ஐபிஎல் 2020 தொடரில், புள்ளிப் பட்டியலில் 4ம் இடம்பிடித்த பெங்களூரு அணி, பிளே ஆஃப் நாக்அவுட் போட்டியில் ஐதராபாத்திடம் தோற்று வெளியேறியது. இதனால், பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலியை நீக்க வேண்டுமென கூறினார் கம்பீர்.

இந்நிலையில் சேவாக் கூறியுள்ளதாவது, “இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் விராத் கோலி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அணிக்கு வெற்றியை தேடித் தருகிறார்.

எனவே, இந்த அடிப்படையில் பார்க்கையில், ஐபிஎல் தொடரில் அவருக்கு சரியான அணி அமையவில்லை என்றே அர்த்தம். கேப்டனை மாற்றிவிட்டால் மட்டும் கோப்பை கிடைத்துவிடுமா என்ன?

எனவே, கேப்டனை மாற்றுவது குறித்து யோசிக்காமல், அணியை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவது குறித்து யோசிப்பதே பயனளிக்கும்” என்றுள்ளார் சேவாக்.