பாட்னா:

உ.பி., பீகார் இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிவசேனா கூட்டணி முறிவை அறிவித்துள்ளது. அதோடு தெலுங்கு தேசமும் பாஜக.வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து லோக்ஜன சக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானும், கூட்டணி கட்சிகளின் தேவையை அறிந்து பாஜக செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த நாட்டை காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளது. அனைத்து சமுதாயங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பை தான் காங்கிரஸ் ஏற்படுத்தியது. அதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணியும் அனைத்து சமுதாய உள்ளடக்கிய கட்டமைப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

உ.பி. மாநிலம் கோராக்பூர், புல்பூர் லோக்சபா தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்திருப்பது கவலை அளிக்கிறது. பீகார் அராரியா தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பி தஸ்லிமுதீன் மரணத்தால் இடைத் தேர்தல் நடந்தது. இதன் அனுதாப அலையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த போராட்டம் பீகாருக்கும் விரிவடைந்துள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கு வேண்டுமானாலும் அவர்களது விருப்பப்படி செல்லலாம். ஆனால் நாங்கள் தே.ஜ.கூட்டணியில் உள்ளோம்’’ என்றார்.

முன்னதாக பஸ்வான் மகனும், எம்.பி.யுமான சிராக் பஸ்வான் கூறுகையில், ‘‘ உ.பி. இடைத்தேர்தல் தோல்விக்கு பின்னர் பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றி அமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.