தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (NCRB), அதனுடைய புள்ளிவிவரப் பட்டியலை சமீபத்தில் ஒரு வருட தாமதத்தில் வெளியிட்டபோது, இந்த தாமதத்திற்கான முக்கிய காரணமாக விசாரணையற்ற, கட்டப்பஞ்சாயத்து மற்றும் மதக் கொலைகளின் பதிவுகளைக் கணக்கில் எடுக்காதிருந்ததையும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட இந்தப் பட்டியல் எந்தெந்த மாநிலங்களில் இம்மாதிரியான செயல்கள் அதிகம் என்றும், எங்கு அறவே இல்லையென்றும் விவரங்கள் காட்டப்பட்டுள்ளது.

கிடைத்த தகவல்களின்படி, முன்னாள் தேசிய குற்றப் பதிவுகள் பணியக இயக்குநர் இஷ் குமார், பெரிய அளவில் தகவல் பதிவுகளை உயிரூட்டி நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், அவரின் மூலமாகவே கூட்டமாக சேர்ந்து கொலை செய்தல், மத காரணங்களுக்குக் கொலை செய்தல் போன்ற துணை தலைப்புகள் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

தகவல் சேகரிப்பு அலுவலகத்தினர் கூறும்போது, “இந்த விவரங்கள் ஏன் புள்ளிவிவரத்தில் பதிக்கப்படவில்லையென்று ஆச்சரியமாக உள்ளது. இந்த விவரங்கள் முழுமையாகத் தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாகும். பதிவு செய்யப்படாததன் காரணம், உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் தெரியும்“ என்று கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் 2015-2016 நடைபெற்றிருந்த, விசாரணையின்றி கூட்டமாக அடித்துக் கொல்லும் சம்பவங்களின் விவரத் தகவல்களே இது சம்பந்தமான தகவல்களை சேகரிக்க வேண்டி தீர்மானம் எடுப்பதற்கு உந்தியுள்ளது.

இந்த நடவடிக்கைக்கான நோக்கம் குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது, “இத்தகையக் குற்றங்களை அரசு கையாள்வதற்கான கொள்கைகள் வகுக்க இது உதவும் என்பதோடு விசாரணையற்ற கொலைகள், திருட்டு, குழந்தை கடத்தல், பசு கடத்தல் ஆகியவைகளின் அடிப்படையில் சந்தேகங்கள் அல்லது சமூகக் காரணங்களும் அடங்குகின்றன“ என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தேசிய குற்றப் பதிவு தகவலின் படி 2016 ஐ விட 30 சதவீதம் அதிகரித்திருக்கும் குற்றம் அரசுக்கெதிரானதாகும். இதில் நாட்டுக்கெதிரான போருக்குத் தூண்டுவதும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும் அடங்குகிறது. தகவலின் படி, இது போன்ற குற்றங்கள் 2016 இல் 6,986 ஆக இருந்தது, 2017 இல் 9,013 ஆக உயர்ந்தது.

இத்தகையக் குற்றங்கள் அதிகமாக ஹரியானா (2,576). உ.பி (2,055) யில் நடந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகிறது. அதிகமான தேசத்துரோகக் குற்றங்கள், அஸாம் (19), ஹரியானா (13), காஷ்மீர் (1) எனவும், மேலும் 28,653 கொலைகள் 2017 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சர்ச்சைகளின் காரணமாக மட்டும் அதிகபட்சமாக 7,898 கொலைகள் நடந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.