புபனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக 5வது முறையாக பதவியேற்றதன் மூலம், ஜோதிபாசு மற்றும் சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார் பிஜு ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக்.

இந்திய வரலாற்றில் இதுவரை, மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு மற்றும் சிக்கிம் மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங் ஆகியோர்தான் 5 முறை தேர்தலில் வென்று முதல்வராக பதவியேற்றவர்கள். அந்த சாதனையை இப்போது சமன் செய்துள்ளார் நவீன் பட்நாயக்.

“எனது குடும்பத்தைச் சேர்ந்த 4.5 கோடி மக்களும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையால், எனக்கான பொறுப்புகளை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார் நவீன் பட்நாயக்.

இந்த பதவி‍யேற்பு விழாவில், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மேலும், நவீன்பட்நாயக்கின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடியும், நவீன் பட்நாயக்கிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.