டெல்லி: மார்ச் 12ந்தேதி முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு தகுதியானவர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

உச்சநீதிமன்றம் நீட் தேர்வுகளை நடத்த அனுமதி அளித்து கடந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு  குறித்து தேர்வுமுகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி,  2022 ஆம் ஆண்டில் MD,MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு ( NEET – PG ) வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் கணினி அடிப்படையில் நடைபெறும் என்று  அறிவித்துள்ளது.

முதுநிலை நீட் தேர்வுக்கு இன்று மாலை 3 மணி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு 11:55 மணி வரை https://nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் என்றும், முதுநிலை நீட் தேர்வின் முடிவுகள் மார்ச் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.