வாஷிங்டன்

ந்திய விண்வெளி ஆய்வு மையத்துடன் கூட்டாய்வு நடத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தியா அனுப்பிய விண்கலன் சந்திரயான் நிலவைச் சுற்றி வருகிறது.    நிலவில் இறங்க சந்திரயானில் இருந்து அனுப்பப்பட்ட விக்ரம் லாண்டர் நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் தொடர்பு இழந்தது.  இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.   விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.   அத்துடன் உலகெங்கும் இருந்து இஸ்ரோவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அமெரிக்க விண்வெளி ஆயுவு மையமான நாசா இந்த  விக்ரம் லாண்டரில் ஒரு விண்வெளிக்கருவியை பொருத்தி உள்ளது.   அந்த விண்வெளிக்கருவி மூலம் நிலவில் இருந்து பூமியின் தூரத்தைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.  அத்துடன் தொடர்பு துண்டிப்பதற்கு முன்பு நடந்தவை குறித்தும் அந்த கருவி மூலம் ஆய்வு நடத்தலாம் எனத் தெரிய வந்துள்ளது   இஸ்ரோ தலைவர் சிவன் விக்ரம் லாண்டர் நிலவில் இறங்கி உள்ளதாக புகைப்படத் தகவல் தெரிவிப்பதாகக் கூறி உள்ளார்.

இந்தியாவின் சந்திரயான் முயற்சிக்கு நாசா பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.  நாசா வெளியிட்டுள்ள பதிவில்,  “பொதுவாக விண்வெளிப் பாதை மிகவும் கடினமானது. ஆயினும், நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லாண்டரை தரையிறக்குவதற்கு இஸ்ரோ மேற்கொண்ட முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம்.   இஸ்ரோவின் இந்த முயற்சி எங்களுக்கு ஊக்கமளித்துள்ளது.  இனி எதிர்காலத்தில் சூரியக் குடும்பம் தொடர்பான விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார அதிகரி ஆலிஸ், “இந்திய நிலவில் ஆய்வு செய்யும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.  நமக்கு இதன் மூலம் பல தகவல்கள் கிடைக்க உள்ளன.  நிச்சயமாக நிலவு ஆய்வுத் திட்டத்தில் இந்தியா ஒரு சாதனை படைக்கும்” என பாராட்டி உள்ளார்.

இதைப் போல் நாசாவின் முன்னாள்  விஞ்ஞானி ஜெரி லினங்கர் இந்தியாவின் முயற்சியைப் புகழ்ந்துள்ளார்.  அத்துடன் புகழ்பெற்ற அமெரிக்கப் பத்திரிகைகளான வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட பல ஊடகங்கள் இந்தியாவின் இந்த முயற்சியைப் பாராட்டி புகழ்மாலை சூட்டி உள்ளன.