அண்டார்டிகா
அண்டார்டிகாவில் உள்ள உலகின் மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று இரண்டாக உடைந்துள்ளது தற்போது வெளியான சேட்டிலைட் புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
உலகின் தெற்கு முனையில் உள்ளது அண்டார்டிகா கண்டம். இது உலகின் ஐந்தாவது பெரிய கண்டம். எப்போதும் பனியால் மூடப்பட்டிருப்பதால் இங்கு மக்கள் வசிப்பதில்லை. பல நாடுகளின் ஆளில்லா ஆய்வுக் கூடங்கள் மட்டுமே உள்ளது. பூமி வெப்பம் அடைவதால் இங்குள்ள பனி உருகி வருகிறது, இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேற்கு அண்டார்டிகாவில் உள்ள லார்சன் சி பகுதியில் ஒரு பெரிய பனிப்பாறையில் முதலில் லேசாக விரிசல் ஏற்பட்டது. தற்போது நாசா வெளியிட்ட புகைப்படங்களின் மூலம் அது இரண்டாக உடைந்து இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தப் பனிப்பாறையின் பரப்பளவு 5000 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். அதாவது நமது சென்னை நகரத்தைப் போல 11 மடங்கு பெரியது.
ஏற்கனவே லார்சன் ஏ மற்றும் லார்சன் பி பகுதியில் இது போன்ற பாறை உடைப்புகள் ஏற்பட்டு பின் அவைகள் முழுவதுமாக நொறுங்கி விட்டன. தற்போது லார்சன் சி பகுதியிலும் இது தொடருமோ என விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். இது தொடர்ந்தால் அண்டார்டிகா பகுதி முழுமைக்கும் பரவி அதனால் உலகுக்கு பேராபத்தாகும் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
உலக வெப்பமயமாவதால் தான் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் பூமி பேராபத்தை சந்திக்கும். வெப்பமயமாவதை உலக நாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்