அகமதாபாத்: கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் படுகொலைகளின் ஒரு அங்கமான நரோடா கேம் சம்பவத்தை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி தவே, திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு, சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளின்போது, நரோடா கேம் என்ற இடத்தில் 11 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில், நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அவரின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பதவி விகித்த மாயாக கொட்னானி முக்கிய குற்றவாளியாவார்.

இவருடன் சேர்த்து, கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்டோர் அவ்வழக்கில் குற்றவாளிகாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் அனைவர் மீதான விசாரணை முடிவடையும் தருணத்தில், நீதிபதி தவே, வல்சாட் மாவட்டத்தின் முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவரின் இடத்திற்கு நீதிபதி எஸ்.கே.பக்ஸி கொண்டுவரப்படுகிறார். புதிய நீதிபதி, இந்த வழக்கின் இறுதி வாதத்தை மீண்டும் ஒருமுறை முழுமையாக கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டது கடும் விமர்சனங்களை எழுப்பியிருந்தது. மோடியின் அரசு இந்தியாவை, ஒரு வாழைப்பழ குடியரசாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.