சென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  5,52,674 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  1,57,614 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில் பொதுமுடக்கத்தின்போது மக்களுக்கு சேவையாற்றிய அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், இன்று  நெல்லை மாவட்டம் நாங்குநேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாராயணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே சோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.