சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக உள்ள நாகராஜன் வெங்கட்ராமனை நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கடந்த 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட தமிழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018-ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடி, 2019 ஜனவரி 27 ஆம் தேதி மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டி இரண்டரை ஆண்டுகள் கழித்து ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச்சில் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அங்கு ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்காத நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படாத நிலையிலும், மருத்துவக்கல்லூரிக்கான மாணவர்கள் சேர்க்கப்பட்டு, அவர்கள்  ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

ஆனால், இந்த காலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட பல எய்ம்ஸ் மருத்துவமனைகள் பணி முடிந்து, திறக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்ட பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவராக உள்ள நாகராஜன் வெங்கட்ராமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.