டில்லி:

நாகாலாந்த் மாநிலத்தில் நாகா மக்கள் முன்னணி, பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அருணாசல், அஸ்ஸாம், மணிப்பூர் மாநிலங்களை ஒருங்கிணைத்து நாகாலாந்தை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்று என்எஸ்சிஎன்-ஐஎம் என்ற அமைப்பு ஆயுதம் ஏந்தி போராடியது. இந்த கோரிக்கையை நிராகரிக்கப்பட்டது. இந்த அமைப்புடன் மத்திய அரசு 1997ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நாகாலாந்து சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்பே மாநில கோரிக்கை தொடர்பாக என்எஸ்சிஎன்-ஐஎம் அமைப்புடன் இறுதியாக ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பிரச்சனை தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது.

இந்நிலையில் நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஆளும் நாகா மக்கள் முன்னணி, பாஜக, நாகாலாந்து காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஜனநாயக முன்னணி, ஐ க்கிய ஜனதா தளம், தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நாகாலாந்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாகாலாந்த் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பது கேள்விகுறியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாஜக தலைவர்கள் 2 பேரை அக்கட்சியின் தலைமை சஸ்பெண்ட் செய்துள்ளது.

இதைதொடர்ந்து மத்திய உள்துறை இணை அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான கிரண் ரிஜ்ஜு, ‘‘நாகாலாந்தில் சட்டமன்ற தேர்தலை அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டாம். நாகாலாந்தின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வுகான மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு புறம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு, மறுபுறம் தீர்வு காண நடவடி க்கை எடுக்கப்படும் என்று பாஜக கூறி வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.