அமராவதி: ஆந்திர மாநிலம் எலூரு பகுதியில் அதிகரித்து வரும் மர்ம நோயின் காரணம் குறித்து, ஆய்வு செய்து வரும்  மருத்துவர்கள், நோயாளிகளின் ரத்தத்தில்   அதிக அளவு ஈயம், நிக்கல் கலந்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இது எப்படி கலந்தது, அதற்கான காரணம் என்பது குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தி வரும் மருததுவர்கள்,  இந்த நோய் மர்மமான ஒரு நோயாக உள்ளது. இது குறித்து கண்டறிய இன்னும் அதிக சோதனைகள் தேவைப்படுகின்றன என்று தெரிவித்து உள்ளனர்.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரின் பல இடங்களில் வசித்த 200க்கும் மேற்பட்டோர்  மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நோயால் பாதிக்கப்பட்டடவர்கள் அனைவரும், சாதாரணமாக இருக்கும் சமயத்திலேயே,  மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ந்து வருகின்றனர்.  பொதுமக்கள் மட்டுமின்றி, காவல்துறையினர்,அரசு அதிகாரிகளும் இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த மர்ம நோய் குறித்து  ஆய்வு செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் உள்பட பல மருத்துவ குழுவினர் நோய் பாதிப்பு அதிகமுள்ள   எலுருவில் முகாமிட்டுள்ளனர்.
நோயாளிகளின் ரத்தம் எடுக்கப்பட்டு நடத்தப்பட்ட பரிசோதனையில்,  “ரத்த மாதிரிகளில் ஈயம் மற்றும் நிக்கலை அதிக அளவில் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது எப்படி சாத்தியம் என்று அதிர்ச்சி அடைந்துள்ள மருத்துவ நிபுணர்கள், “நிக்கல் மற்றும் ஈயம் (Lead) எந்த மூலங்களிலிருந்து வந்திருக்கும் என்பதைக் கண்டறிய முயற்சிப்பதில் நாங்கள் மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும்,  இந்த உலோகங்கள் பால் மற்றும் தண்ணீரில் கலந்திருக்கின்றனவா என ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டது. ஆனால், அப்படி ஏதும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், இந்த நோய் பரவலின் காரணம் குறித்து மேலும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்து உள்ளனர்.
காய்கறிகள், இனிப்புகள் உள்பட மக்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுப்பொருட்களை ஆராய்ந்து வருவதாகவும்,விரைவில் நோய் பாதிப்புக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்துவிடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.