சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,   மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனம் உள்ளது என கூறினார். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 சென்னை தலைமைச் செயலகத்தில் குடிமைப்பணி தேர்வில்  (யுபிஎஸ்சி)வெற்றி பெற்றவர்களுக்கு இன்று  பாராட்டு விழா நடைபெற்றது.  தமிழ்நாடு அண்ணா மேலாண்மை கல்லூரியில் பயின்றவர்களில் 19 பேர்  தேர்ச்சி பெற்ற நிலையில், மாநிலம் முழுவதும் மொத்தம் 33 பேர் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது,  தமிழக அரசு நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் நிறுவனத்தில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த இடத்துக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்பது மிகவும் கடமை, பொறுப்புமிக்க பதவிகளாகும். குடிமைப்பணி தேர்வில் வென்றவர்கள் மக்களுக்காக பாடுபட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கிராமப்புற மக்களின் வாழ்வானது அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம்தான் மேம்பட வேண்டும். நாடி வரும் ஏழை, எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. அகில இந்திய தேர்வினை சிறப்பாக எதிர்கொண்ட நீங்கள், அடுத்துவரும் பயிற்சியை சிறப்பாக நிறைவுசெய்வீர்கள் என நம்புகிறேன் என்றார்.

கிராமப்புற மக்களின் வாழ்வானது அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம்தான் மேம்பட வேண்டும் என குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இந்த இடத்துக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள். மக்களிடம் கனிவாக பழகுங்கள் அவர்கள்தான் நமது உண்மையான மேல் அதிகாரிகள் என்று  மக்களிடம்தான் நாம் நன்மதிப்பை பெற வேண்டும். இத்தோடு போதும் என்று படிப்பை நிறுத்தி விடாதீர்கள்; சமூகத்தை பற்றி நிறைய படிக்க வேண்டும். சட்டத்தின்படியும், மனசாட்சியின்படியும் நீங்கள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மீதே எனது முழு கவனமும் இருக்கிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தை செப்.15 முதல் செயல்படுத்த இருக்கிறோம். ரூ.1000 உரிமைத்தொகை யாருக்கெல்லாம் அவசியமோ அவர்களுக்கு அறிவித்துள்ளோம். தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்த கலைஞரின் பெயர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை என்ற அதிகாரத்தை வழங்கியவர் கலைஞர்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில் 2022ஆம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை முதலமைச்சர் ஸ்டலாலின் வழங்கினார்.