மும்பை

ராமரிப்பு பணிகள் காரணமாக மும்பை நகரில் குடிநீர் விநியோகம் 5% குறைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் புறநகர்ப்பகுதியான பந்துப்பில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆசியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம் ஆகும். மும்பையின் பெரும்பாலான பகுதிகளுக்கு இங்கிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இங்கு 1910 மில்லியன் லிட்டர் மற்றும் 900 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சுத்திகரிப்பு அலகுகள் உள்ளன.

தற்போது மும்பை நகருக்குக் குடிநீர் வழங்கக்கூடிய பந்துப் சுத்திகரிப்பு நிலையத்தில் பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், குடிநீர் விநியோகம் குறைக்கப்பட்டிருப்பதாக பிரஹன்மும்பை மாநகராட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி மராட்டிய மாநிலம் மும்பை நகரம் முழுவதும், ஏப்ரல் மாதம் 24-ம் தேதி வரை குடிநீர் விநியோகம் 5 சதவீதம் குறைக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.  மேலும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பதால், மக்கள் சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தும்படி மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.