சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி இல்லையே! அனுபவம் வாய்ந்த, வலிமையான பேட்டிங் வரிசை உள்ள அணிதான் என்றாலும், நாங்களும் வலுவாகத்தான் இருக்கிறோம் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியுள்ளதாவது, “டெல்லி கேபிடல்ஸ் அணி இளம் கேப்டன் ரிஷப் பன்ட் தலைமையில் களமிறங்குவதால் ஆர்வத்துடன் இருக்கிறோம். இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி வலுவானதாக இருந்தாலும், வீழ்த்த முடியாத அணியெல்லாம் இல்லை. ஒவ்வொரு அணியும் வலுவாகத்தான் இருக்கிறார்கள். நான் சாதுர்யமாகப் பேசவில்லை. மும்பை அணி உண்மையில் வலிமையான அணிதான்; அனுபவமான வீரர்களைக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்கவில்லை.

தங்களின் முதல் போட்டியைக் கூட மும்பை அணி வெற்றியுடன் தொடங்கலாம். ஆனால், அதேசமயம், மும்பை அணி வெல்ல முடியாத அணியல்ல என்பதையும் சொல்கிறேன்.

இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் வலுவான சமநிலையுடன் வீரர்கள் இருக்கிறார்கள். அதிலும் கேப்டன் ரிஷப்பன்ட் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார் என்பதால், பட்டம் வெல்ல வாய்ப்பு அதிகம்.

கடந்தாண்டு தொடரின்போது, பேட்டிங் சரியான நேரத்தில் ஒன்றுகூடி செயல்படவில்லை. இதற்கு வேறுசில காரணங்கள் இருந்தன என்பதையும் புரிந்துகொண்டோம். ஆனால், இந்தாண்டு, ரிஷப்பன்ட் சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். பேட்டிங்கிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்த்தால், டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பாக விளையாடி முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளது. ஒவ்வொரு அணியும் வீரர்களை கவனத்துடன் தேர்ந்தெடுத்துள்ளது மற்றும் சமநிலையுடன் அணியை அமைத்துள்ளார்கள்” என்றுள்ளார் அஸ்வின்.