மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டு இருந்தது பற்றி என்.ஐ.ஏ விசாரணையை தொடங்கி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான அடுக்குமாடி வீட்டின் அருகே பிப்ரவரி 25ம் தேதி நிறுத்தப்பட்டிருந்த மர்ம காரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில்  20 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் மிரட்டல் கடிதம் ஒன்று இருந்தது.

அவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு மர்ம கார் சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. தொடர் விசாரணையில் வாகன உதிரிபாகங்கள் தொழிலில் ஈடுபட்டு வந்த ஹிரேன் மன்சுக் என்பவருக்கு அந்தக் கார் சொந்தமானது என்பது தெரியவந்தது.

அவர் தானே நகரில் உள்ள கல்வா கிரீக் நீரோடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் மறு வழக்குப்பதிவு செய்து என்.ஐ.ஏ தங்களது விசாரணையை தற்போது தொடங்கி உள்ளது.