புதுடெல்லி: தங்கள் பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் தற்போதைய கொரோனா கால நடைமுறையை, அடுத்த 6 மாதங்களுக்குத் தொடர விரும்புவதாக 70%க்கும் அதிகமான நிறுவனங்கள் விரும்புவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
‘நைட் பிராங்’ எனும் நிறுவனத்தால் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சமூக இடைவெளியைப் பராமரிக்கவும், வணிகத்தைத் தொடர்ந்து நடத்துவதற்காகவும், இந்தத் திட்டத்தை நிறுவனங்கள் தொடர விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; வீட்டிலிருந்தே பணிகளைத் தொடர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோதும், அதனால் உற்பத்தி திறன் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், தொலைவிலிருந்து செயல்படும்போது, ஊழியர்கள், குடும்பத்துடனான இணைப்பு, கவனச்சிதறல் ஆகிய இரண்டு சவால்களை எதிர்கொண்டிருக்கின்றனர். அடுத்த 6 மாதங்களுக்கு, 30%க்கும் அதிகமானோர் வீட்டிலிருந்தே பணியாற்றுவர் என ஆய்வில் கலந்துகொண்டோரில் 50%ஆட்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் 7% ஆட்கள் மட்டும், அனைவரும் அலுவலகம் வந்து பணியாற்றுவர் என தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டிலிருந்து பணியாற்றிய நிலையில், உற்பத்தி திறன் அதிகரித்திருப்பதாக 28% பேரும், முன்னர் இருந்த அளவிலேயே இருந்ததாக 35% பேரும், 26% பேர் உற்பத்தித் திறன் குறைந்துவிட்டதாகவும், 11% பேர் கணித்து சொல்வது கடினம் எனவும் தெரிவித்துள்ளனர்.