சென்னை,
தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள், ஆதார் எண்கள் பெற இ.சேவை மையத்தை நடத்தி வருகிறது.
இதன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல்பட்டதாரி சான்றிதழ், கணவனால் கைவிட்ப்பட்ட சான்றிதழ், ஆதார் திருத்தம் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் இந்த மையத்துக்கு சென்று மனு கொடுத்து, அதற்கான கட்டணம் மட்டுமே செலுத்தி எளிதாக சான்றிதழ்களை பெற்று வருகிறார்கள்.
இந்த இ.சேவை மையங்கள் மூலம் மேலும் 15 வகையான சான்றிதழ்கள் பெறுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
அரசு இசேவை மையங்களில் இனிமேல் கூடுதலாக அரசுத்துறையின் 15 வகையான சான்றிதழ்களை பெறலாம். இதற்கான உத்தரவை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கடந்த சட்டமன்ற கூட்டத்தின்போது வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதன் மூலம், விவசாய வருமானம், சிறுகுறு விவசாயி, விதவை, கலப்புத்திருமணம், வேலை யில்லாதவர், குடிபெயர்வு, பள்ளி கல்லூரி சான்றிதழ் நகல், வாரிசு, வசிப்பிட, சொத்து மதிப்பு, அடகு வணிக உரிமம், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்பட்ட வகுப்பினர் என அனைத்து வகையான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
லஞ்சம் இல்லாமல், அலைச்சல் இல்லாமல் சான்றிதழ்கள் பெற இசேவை மையங்கள் உதவி வருகின்றன.
சென்னையில் மட்டும் 63 இடங்களில் இ.சேவை மையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 124 நகராட்சி பகுதியிலும் 11 மாநகராட்சியிலும் அரசு துறையான ‘எல்காட்’ நிறுவனம் மூலம் இந்த சேவை மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.