சென்னை: கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக திட்டங்கள் வகுக்க வேண்டும் என்றும், கூடுதல் கவனம் தேவை என்றும், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது  அலை தீவிரமடைந்துள்ளதால், இது  தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் விசாரணை  தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த விசாரணையின்போது தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டபடி, தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக  ஏற்படுத்தப்பட்டு வரும படுக்கை  வசதிகள், ஆக்சிஜன் சப்ளை, ரெம்டெசிவிர் மருந்தை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பது குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.

விசாரணையின்போது,  மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு குறைத்து காட்டி வருகிறது என்றும், ஊரடங்கு அமலில் இருந்தபோதும்,  ஏராளமானோர்  வாகனங்களில் சாலைகளில் ஏராளமானோர் சுற்றித் திரிவதாகவும், குழந்தைகள் விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும், சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும்,  மாநிலம் முழுவதும் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற வளாகங்களை கொரோனா சிகிச்சை மையங்களாகவோ, தடுப்பூசி மையங்களாகவோ பதன்படுத்திக் கொள்ளலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்தனர். மேலும், கொரோனா பரிசோதனைகளை குறைக்க கூடாது என அறிவுறுத்திய நீதிபதகள், கொரோனா மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்,  அப்போது தான் எதிர்காலத்தில் ஆக்சிஜன், மருந்து பெற உதவியாக இருக்கும் என சுட்டிக்காட்டினர்.

கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்களை மருத்துவமனைகளிலேயே வைத்திருப்பது மற்ற நோயாளிகளுக்கு அச்சம் ஏற்படுத்தும் என்பதால் அவற்றை உரிய விதிகளை பின்பற்றி அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், உடல்களை கண்ணியமாக கையாள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஊரடங்கு நல்ல முடிவுகளை தந்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள்,  அதை கடுமையாக்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதிகரித்து வருகிறது என்று கவலை தெரிவித்த நீதிபதிகள்,  கொரோனாவால் பாதிக்கப்படும்  குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக திட்டங்கள் வகுக்க வேண்டும் எனவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை மே 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.