சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போதும் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த பண மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக  வரும் 31ந்தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

தற்போது, திமுக ஆட்சியில்  மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில்,  கடந்த 2011 -15 ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது , போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது.  இதில் நடைபெற்ற பண மோசடி குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த  சென்னை எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

இதற்கிடையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த ஆட்சியில் போடப்பட்ட பல வழக்குகள் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி  முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் என நூற்றக்கணக்கானவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

இந்த நிலையில்,  தன் மீதான இந்த மூன்று வழக்குகளையும் ரத்து செய்ய கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு  நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அவரது மனுவில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆகவே வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தமிழக அரசில் அதிகாரம் மிக்கவராக உள்ளார் செந்தில் பாலாஜி. அவர் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை ரத்து செய்யக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதுபோல, செந்தில்பாலாஜி மீது புகார் கொடுத்தவர்களும்,  வழக்கை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை  தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி, இந்த வழக்கில், வரும் 31-ஆம் தேதி தீர்ப்பு வழங்க இருப்பதாக அறிவித்ததார்.