புதுடெல்லி:

டிசம்பர் 26 மும்பை தாக்குதலுக்குப் பின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியதற்கு, ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்துள்ளது ‘தி கொய்ண்ட்’ இணையம்.


‘தி கொய்ண்ட்’ வெளியிட்ட கட்டுரையின் சாராம்சம் வருமாறு:

கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் பேசிய பிரதமர் மோடி, யூரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்குப் பின், தீவிரவாதிகளுக்கு நம் வீரர்கள் பதிலடி கொடுத்தார்கள். நம் நாட்டின் பாதுகாப்புக்காக பாடுபடும் நம் வீரர்களை வணங்குகின்றேன்.

ஆனால், 2011-ம் ஆண்டு டிசம்பர் 26 நடந்த மும்பை தாக்குதலுக்குப் பின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், கஸாப் தூக்கிலிடப்பட்டது, பாகிஸ்தானுக்கு ராஜ்யரீதியிலான அழுத்தம் கொடுத்து தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை அடையாளம் கண்டது ஆகியவற்றை பிரதமர் மறந்து பேசுகிறார்.
மும்பை தாக்குதல் நடந்தவுடனேயே, பாகிஸ்தான் தூதுவர் ஷாகித் மாலிக்கை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பை பதிவு செய்தது.

அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, மசூத் அஜார் மற்றும் தாவூத் இப்ராகீம் உட்பட 20 தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தானை கேட்டுக் கொண்டார்.
அப்போது கருத்து தெரிவித்த பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை என்று கூறினார்.

தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தியா விமான தாக்குதல் நடத்தும் என்ற அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் தகவலை, கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக இருந்த யூசுப் ராஜா கிலானியிடம் அமெரிக்க எம்பி ஜான் மெக்கெய்ன் தெரிவித்தார்.

அப்போது, முக்கியமான நகரங்களில் பாகிஸ்தான் போர் விமானங்களை தயார் நிலையில் வைத்திருந்தது. மேற்கு எல்லையில் இந்தியாவும் விமானங்களை தயார் நிலையில் வைத்தது.

மேற்கு விமானப்படை தலைமை கமாண்டர் பிகே.பர்போரா, பாகிஸ்தானின் தாக்கப்படவேண்டிய 5 ஆயிரம் இலக்குகளை அடையாளம் கண்டார்.

அதன்பின்னர், அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான உயர் மட்டக்குழு கூடி, யாரும் போரை விரும்பவில்லை என்று அறிவித்தது.

2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் தப்பிய அஜ்மல் கஸாப் 2012-ல் தூக்கிலிடப்பட்டார். அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கஸாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து,அவர் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் நடத்திய விசாரணையின்போதுதான், இந்த தாக்குதலில் லஷ்கர் இ தொய்வா தீவிரவாத இயக்கம் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்த ஆதாரத்தை கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியது. கடைசியில் கஸாப் பாகிஸ்தான் பிரஜைதான் என்பதை அந்நாடு ஒத்துக் கொண்டது. மேலும், பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கையை நிறுத்துவதாகவும் அந்நாடு உறுதியளித்தது.

கடந்த 2009-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜாக்கிர் உர் ரகுமான் உட்பட 7 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது.
தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. எனினும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என கூறி லாகூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதற்கிடையே, மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹீட்லியை அமெரிக்க அதிகாரிகள் சிகாகோவில் கைது செய்தனர்.
மும்பை தாக்குதலுக்கு முன், இடங்களை தேர்வு செய்தவர் இவர்தான்.

34 மணி நேர தொடர் விசாரணைக்குப் பின், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஈடுபட்டுள்ளதை ஹீட்லி ஒப்புக் கொண்டார்.
அவருக்கு சிகாகோ நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இவ்வாறு ‘தி கொய்ண்ட்’ இணையம் விளக்கம் கொடுத்துள்ளது.