புதுவை சட்டமன்ற துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ எம்.என்.ஆர் பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொறுப்பு காலியாக உள்ளது. இப்பொறுப்புக்கு போட்டியிட விரும்புவோர், வேட்புமனுவை தாக்கல் செய்ய சட்டப்பேரவை செயலர் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில், உழவர்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவான எம்.என்.ஆர் பாலன், துணை சபாநாயகர் பொறுப்புக்கான வேட்புமனுவை இன்று காலை, சட்டப்பேரவை செயலர் வின்சென் ராயரிடம் அளித்தார். அவரை தொடர்ந்து எதிர்கட்சிகள் தரப்பில் என்.ஆர் காங்கிரஸ் சார்பிலான வேட்பாளர் நிறுத்தப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்ட நிலையில், பாலனை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

இதன் காரணமாக, புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ எம்.என்.ஆர் பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.