சென்னை:
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனினும், கடந்த 2 ஆண்டுகளாக இதுகுறித்து ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் எதிர்க்கட்சியினர், பல்வேறு சமூக நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இது தொடர்பாக 2018 செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளார். எனவே இதுகுறித்து ஆளுநரிடம் கூறியதற்கு, முறையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார் என்றார்.