மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள தமது ஆதரவாளர்கள் ஜனவரி 3ம் தேதி மதுரை வர வேண்டும் என்று மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. ஆகையால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் தமது புதிய கட்சி அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி வெளியிட உள்ளார்.

இந் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆதரவாளர்களுடன் ஜனவரி 3ம் தேதி ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவித்து உள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இந்த ஆலோசனை கூட்டம் 03/01/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் வரும் போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.