டில்லி

திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே மிதிலி புயல் கரையைக் கடந்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய, மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகக்கூடும் எனத் தெரிவித்து இருந்தது.

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மிதிலி’ புயலாக வலுப்பெற்றது. இந்த புயலானது வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தின் மோங்கா, கொபுரா கடற்கரை இடையே கரையைக் கடக்கும் என்றும், கரையைக் கடக்கும்போது மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

நேற்று மிதிலி புயல் கரையை கடந்துள்ளது, அது 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்கதேசம் அருகே இரவு கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசியதுடன், கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. மிதிலி புயல் கரையை கடந்து  வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.