டெல்லி: எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதி அளித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. கல்வியில் மும்மொழி கொள்கையை திணிப்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய, அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய இக்குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: புதிய கல்விகொள்கை குறித்த கோரிக்கை மனுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக டி.ஆர்.பாலு என்னிடம் சமர்பித்தார். அவரிடம் எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்பதை  விளக்கினேன்.

மேலும் டி.ஆர்.பாலுஜி அவர்களிடம், பயிற்று மொழியை தெரிவு செய்துகொள்வது அந்தந்த மாநிலங்களின் உரிமை என்பதையும் மற்றும் புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்தும் அவரிடம் விளக்கினேன். நாம் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார்.