மெக்சிகோ
பதவி விலகிய பொலிவிய அதிபருக்குப் புகலிடம் அளிக்கத் தயாராக உள்ளதாக மெக்சிகோ தெரிவித்துள்ளது.
பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மார்லஸ் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பே அந்நாட்டு அதிபர் தனது வெற்றிச் செய்தியை அறிவித்தது மக்களிடையேயும் எதிர்க்கட்சிகளிடையேயும் கடும் சர்ச்சையை உண்டாக்கியது. தேர்தலில் அதிபர் மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதையொட்டி அதிபர் இவோ மாரல்ஸுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரும் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் இறங்கினர். எனவே அதிபர் இவோ மாரல்ஸ் நேற்று பதவி விலகி உள்ளார். அத்துடன் அவருக்கு ஆதரவு அளித்த அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர்.
இவ்வாறு பதவி விலகிய அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் மெக்சிகோவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவ்ர்களுக்கு மெக்சிகோ அரசு அடைக்கலம் அளித்துள்ளது. இந்நிலையில் மெக்சிகோவின் வெளிநாட்டு அமைச்சர் மார்செலோ எப்ரார்ட் டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “மெக்சிகோவின் தஞ்சம் அளிக்கும் மற்றும் தலையிடாமை வழக்கத்தின்படி பொலி வியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் என 20 பேருக்கு தஞ்சம் அளித்துள்ளோம். நாங்கள் பொலிவிய அதிபர் இவோ மாரல்ஸுக்கும் தஞ்சமளிக்க தயாராக உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.