சென்னை

வானிலை ஆய்வு மையம் 9 துறைமுகங்களுக்குப் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 19 ஆம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்றய நாள் நள்ளிரவிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. பிறகு இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது.

இவ்வாறு தென்மேற்கு அரபி கடலில் உருவான இந்த புயலுக்கு ‘தேஜ்’ எனப் பெயரிடப்பட்டு உள்ளது. நேற்றிரவு 11.30 மணியளவில் ‘தேஜ்’ அதிதீவிர புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு அரபிக் கடலில், சகோத்ரா (ஏமன்) நகருக்கு 330 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், சலாலா (ஓமன்) நகருக்கு 690 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா (ஏமன்) நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணிநேரத்தில் புயல் அதிக வலுப் பெற்று இன்று மதியம் புயல் இன்னும் அதிக வலுப்பெறக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அத்துடன் வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் ஒரு புயல் உருவாகி உள்ளதால் சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுத்து 1 ஆம் எண் கூண்டு ஏற்ற அறிவுறுத்தி உள்ளது.