டில்லி

மெட்ரோ ரெயில் சேவை மார்ச் 2019க்குள் மேலும் 331 கிமீ தூரத்துக்கு 9 நகரங்களில் விரிவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரெயில் துவக்கப்பட்டது.   அது சிறிது சிறிதாக விரிவாக்கப்பட்டு வருகிறது.  முதன் முதலாக மெட்ரோ ரெயில் சேவை கொல்கத்தாவில் 1984ல் துவங்கப்பட்டது.  பின் மேலும் பல நகரங்க்ளில் செயல்படுத்தப்பட்டது.  முந்தைய அரசு அறிவித்த மெட்ரோ ரெயில் சேவை பல இடங்களில் முடியும் தருவாயில் உள்ளது.   பா ஜ க அரசு பொறுப்பேற்ற பின் நாக்பூர், அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களில் மெட்ரோ சேவை துவங்கப்பட்டது.  தற்போது 537 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டில்லி, நொய்டா, லக்னோ, ஹைதராபாத், கொச்சி, நாக்பூர், பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களுக்கு  331 கி மீ தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை மேலும் விரிவு படுத்தப் படும் என அரசு அறிவித்துள்ளது.    மெட்ரோ ரெயில் பணிகளுக்காக நிதி நிலை அறிக்கையில் அரசு ரூ 42696 கோடி  கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கியுள்ளது.  இதற்கு முன்பு 2012-15 வரை ரூ. 16565 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.  விரைவில்  மெட்ரோ ரெயில் வேலைகளை முடிக்கவே இது போல 258% தொகை ஒதுக்கீடு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  லக்னோவில் இன்னும் 15 நாட்களில் மெட்ரோ ரெயில் சேவை துவங்க உள்ளது

வரும் தேர்தல்களில் பா ஜ க அரசு தனது சாதனைப் பட்டியலில் மெட்ரோ ரெயில் சேவையை முதன்மையாக தெரிவிக்க உள்ளதால் இவ்வாறு அதிக தொகை ஒதுக்கிடப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.